Blogger இயக்குவது.

பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (13.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசே! பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு
10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்க!

சிறப்பு முகாம்களை இழுத்து மூடி ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்திடுக!!


பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்தாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளை முன்னிட்டு 10 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த அனைத்து சிறை கைதிகளையும் தமிழக அரசு கருணையுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
சிறைச்சாலைகள் என்பது தவறு செய்தோர் தண்டனை அனுபவிக்கும் இடம் என்பதுடன் அவர்களை சீர்திருத்தும் இடமும் கூட.. இந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த கைதிகளை கருணையுள்ளத்துடன் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இதேபோல் 10 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அப்போதைய தி.மு.க. அரசு, 7 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளையே கூட விடுதலை செய்திருக்கிறது என்ற முன்னுதாரணத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதேபோல் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 14 ஈழத் தமிழர்களையும் செய்யாறு சிறப்பு முகாமில் உள்ள 4 ஈழத் தமிழர்களையும் மனிதாபிமானத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தப்பி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழகத்துக்கு அடைக்கலமாக வந்தவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஆகையால் இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் எனது தலைமையில் திருச்சியில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியிருந்தோம்.
இந்த நிலையில் இன்றும் கூட திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 5 ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் இருப்பது உலகத் தமிழர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகையால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளையொட்டி 10 ஆண்டுகாலம் சிறையில் வாடும் அனைத்து கைதிகளுடன் இந்த சிறப்பு முகாம்களளயும் இழுத்து மூடி அந்த முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


Read more...

மத்திய அரசு சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (01.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

சுங்கக் கட்டண குறைப்பு எனும் ஏமாற்று வித்தையை அரங்கேற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்!!

சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுக!

சுங்க சாவடிகளில் கட்டணம் தர மறுக்கும் "ஒத்துழையாமை" போராட்டம் நடத்தப்படும்!
நாடு முழுவதும் 60 சுங்க சாவடிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் 2.5 விழுக்காடு சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கை.
சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணத்தை மிக மிகக் கடுமையாக உயர்த்துவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஒரு அரசு என்பது மக்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளில் சாலை வசதியும் ஒன்று.
ஆனால் இந்த அடிப்படை வசதியை மக்கள் பயன்படுத்துவதற்கும் கூட சுங்கக் கட்டணம் என்கிற பகல் கொள்ளை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 44 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்க சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், 18 சுங்க சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இருப்பினும் கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பார்க்கும் வகையில் நடுத்தர, ஏழை மக்களின் பணத்தை சுரண்டுகிற வகையில் தொடர்ந்து 15 சதவீத அளவில் சுங்கக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதே அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு.. அப்படியான எந்த ஒரு வசதியையும் செய்துதராமலேயே கட்டணம் எனும் பகல் கொள்ளையை அரங்கேற்றுவதில்தான் வழிப்பறி செய்வதில்தான் தனியார் நிறுவனங்கள் குறியாக இருந்து வருகின்றன. மத்திய அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றுகிற மாபெரும் முற்றுகைப் போராட்டங்களை 2 முறை நடத்தியிருக்கிறது. தற்போது திடீரென சுங்கக் கட்டணத்தை வெறும் 2.5 விழுக்காடு குறைக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு என்பது 15 விழுக்காடுக்கும் அதிகமாம்.. குறைப்பது என்கிற போது மட்டும் வெறும் 2.5 விழுக்காடா?
பொருளாதாரக் குறியீட்டு எண்படி இந்த சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உண்மையில் பொருளாதார குறியீட்டு எண்ணின்படி 7.5 விழுக்காடு கட்டணத்தைத்தான் மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும். அதுவும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இந்தக் கட்டணக் குறைப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாமல் வெறும் 60 சுங்கச் சாவடிகளில் 2.5% சுங்கக் கட்டணம் குறைப்பு என்பது ஏமாற்று வித்தைதானே தவிர வேறு எதுவும் இல்லை என வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆகையால் மத்திய அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து விரைவில் சுங்கக் கட்டண முறையையே ஒழிக்க வேண்டும்; அத்துடன் இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் எவ்வளவு? அந்த கட்டணத்தில் இருந்து சாலையை பயன்படுத்துகிற மக்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன? இன்னும் எத்தனை ஆண்டுகாலத்துக்கு இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்? என்ற விவரங்களை அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து, சுங்கக் கட்டண வசூல் தொடர்பான முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிடாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் "சுங்கக் கட்டணத்தை செலுத்த மாட்டோம்" என்ற ஒத்துழையாமை இயக்கத்தை பொதுமக்களை ஒன்றுதிரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளை முற்றுகையிட்டு மாபெரும் தொடர் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.வேல்முருகன் அறவிப்பு

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் 14.08.2015 இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வாழ்வுரிமைக்காக போராடும் என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாபெரும் தொடர் போராட்டம்!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 26வது நாளாக நீடிக்கிறது. இன்று முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டிய ஊதிய மாற்று பேச்சுவார்த்தையானது 43 மாதங்கள் கடந்த நிலையிலும் பேச்சுவார்த்தையாகவே தொடர்கிறது. தொழிலாளர்களின் நியாயமான முறையான கோரிக்கையை பற்றி எந்த ஒரு அக்கறையுமேயே இல்லாமல் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் என்.எல்.சி. நிர்வாகம் நடந்து கொள்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடன் போராடிப் பார்த்து தற்போதுவிட்டு தற்போதும் 26 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகமோ தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஈவிரக்கமற்று காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் அடக்குமுறையை ஏவிக் கொண்டிருக்கிறது..
இதன் உச்சமாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் திருமாவளவனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து அதிகார மமதையை என்.எல்.சி. நிர்வாகம் வெளிப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகாலம் புதியஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை; போராடுகிற தொழிலாளர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்க தயாரில்லை என்பது வெட்கக் கேடானது; மத்திய அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது.
தற்போது நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒருசேர தங்களது வாழ்வுரிமைக்காக போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் துயரம் சொல்லி மாளாதது. ஒட்டுமொத்தமாக நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்கள் அனைத்திலும் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு பதற்றமான நிலைமையே உருவாகியுள்ளது.
இந்த நிலை நீடிக்குமேயானால் என்.எல்.சியில் மின் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியாவே இருளில் மூழ்கிவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் அசாதரணமான நிலைமை மிகப் பெரும் போராட்டமாக எந்த நேரத்திலும் வெடிக்கவும் செய்யும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
போராடுகிற தொழிலாளர்களுடன் நியாயமான முறையில்பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டிய என்.எல்.சி. நிர்வாகம் சட்டாம்பிள்ளைத்தனமாக தொடர்ந்து அடாவடியாக செயல்பட்டு வருவதை உடனே நிறுத்த வேண்டும்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிற நிர்வாகம், என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிடுகிற, அராஜகப்போக்குடன் நடந்து கொள்கின்ற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்கள், இல்லங்களை தொழிலாளர் தோழர்கள், பொதுமக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் தொடர் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனே தலையிட்டு சுமூகத் தீர்வு காண உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்

Read more...

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் - கரூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

புதன், 12 ஆகஸ்ட், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வார், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம், காந்தியவாதி சசிபெருமாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

1. மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் ராமேஸ்வரம் பகுதியில் உயர் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்; அவர் பிறந்த ராமேஸ்வரத்தின் வங்கக் கடல் பகுதியில் மிக பிரமாண்டமான முழு உருவச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது. 

2. மது ஒழிப்புப் போராட்ட களத்திலேயே உயிரைத் தியாகம் செய்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாளின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும் தமிழகத்துக்கு உரிய நீர் திறந்துவிடப்படவில்லை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகிறார். இந்திய நாட்டின் மத்திய அமைச்சராக இருக்கும் சதானந்த கவுடாவும் இந்த மேகதாதுவால் தமிழகத்துக்கு பாதுகாப்புதான் என கூறி வருகிறார். சதானந்த கவுடா ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்குமான அமைச்சர் என்பதை மறந்துவிட்டு கர்நாடகாவின் பிரதிநிதிபோல் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

4. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்; மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அணை கட்ட கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று இந்த செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

5. தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை உடனே நியமித்து அணையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. நெய்யாறு அணையில் இருந்து உரிய நீரை கேரளா திறந்துவிட தமிழகம் மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த செயற்குழுக் கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்திருப்பதை இச்செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களையே விடுதலை செய்துள்ள நிலையில் ராஜிவ் காந்தி வழக்கில் கால் நூற்றாண்டுகாலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் ஆணித்தரமான வாதத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியுடன் வரவேற்கிறது. இனியும் 7 தமிழர் விடுதலையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் போல் முட்டுக்கட்டைப் போட்டு குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்காமல் 7 தமிழரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நல்லெண்ண நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.

8. சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் கொடுமை நீடிக்கிறது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது துப்பாக்கிச் சூடு நடத்துதல், சிறைபிடித்தல், வலைகளை அறுத்தி கொடூரமாகத் தாக்குவது என சிங்களக் கடற்படையின் அட்டூழியம் நீடிக்கிறது. இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம் என சூளுரைத்த பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தும் இன்னமும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்ற வேதனையை இச்செயற்குழுக் கூட்டம் வெளிப்படுத்துகிறது. கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையில் கொடுமைகளை அனுபவித்த 40 தமிழக மீனவர்கள் தற்போதுதான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர் விடுதலைக்காக மத்திய அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தால், ரஷ்யாவுக்கு சென்ற நிலையிலும் கூட பாகிஸ்தானின்பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் பிரதமர் மோடி அவர்கள், தமிழக மீனவர்கள் விவகாரத்திலும் அதே நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழக மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

9. இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறையில் இருந்து உயிர்தப்பி தாய் தமிழகத்தில் அடைக்கலம் கோரி வந்த ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக சிறப்பு முகாம்கள் எனும் சிறைக் கொட்டடிகள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சிறப்பு முகாம்களில் இருந்து தங்களை விடுதலை செய்யக் கோரி செங்கல்பட்டு, பூவிருந்தவில்லை உள்ளிட்ட முகாம்களைச் சேர்ந்த ஈழத் தமிழ் உறவுகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி முகாமில் ஈழத் தமிழர் கணவனும் மனைவியுமாக தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். ஈழத் தமிழர் நலனில் பெரிதும் அக்கறை காட்டுகிற தமிழக அரசு, ஒட்டுமொத்த இந்த வதை முகாம்களாகிய சிறப்பு முகாம்களை இழுத்து மூடி அவர்கள் இதர ஈழத் தமிழர்களைப் போல முகாம்களில் வாழவோ அல்லது விரும்பும் வெளிநாடுகளுக்கு செல்லவோ தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

10. ஆந்திராவில் கூலித் தொழிலாளர்களாக சென்ற 20 அப்பாவி பழங்குடி இன தமிழர்களை செம்மரம் வெட்டியவர்கள் எனக் கூறி கடத்தி சித்ரவதை செய்து சுட்டுப் படுகொலை செய்த இனப்படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் 20 அப்பாவி தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்வைத்த வேண்டுகோளை ஏற்று தாயுள்ளத்துடன் பரிசீலித்து 20 தமிழர் குடும்பத்துக்கும் அரசுப் பணி வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

பாக். பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மீனவர்களை விடுவிக்கும் பிரதமர் மோடி, இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுதலை செய்யாதது ஏன்? - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கேள்வி

வெள்ளி, 10 ஜூலை, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இன்று 10.07.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
பாக். பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மீனவர்களை விடுவிக்கும் பிரதமர் மோடி அவர்களே! இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுதலை செய்யாதது ஏன்?

பாகிஸ்தான் சிறையில் உள்ள குஜராத் மீனவர்களை விடுதலை செய்வதற்காக "எதிரி" நாடான பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதம நரேந்திர மோடி, 'நட்பு நாடான' இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க அக்கறை செலுத்தாததை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
ரஷ்யாவின் உபா நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் 15 நாட்களில் விடுதலை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அண்டைநாடாக இருந்தாலும் பாகிஸ்தான் ஒரு எதிரிநாடு.. இந்தியாவுடன் யுத்தம் புரிந்த நாடு.. இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்த நாடு.. இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி மும்பை தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்திய நாடு என்றே பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட 'எதிரிநாடு' பாகிஸ்தான் சிறைபிடித்திருக்கும் இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் 15 நாட்களில் விடுதலை செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க முடிகிறது. இதை நாம் வரவேற்கிறோம்.
ஆனால் இந்தியாவின் நட்பு நாடு.. இந்தியாவிடம் ஆண்டுக்கு ரூ5ஆயிரம் கோடி கடன் பெறுகிற சுண்டைக்காய் நாடான இலங்கையோ நித்தம் நித்தம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது; கைது செய்து சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறது; ஓராண்டுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான மீனவர் படகுகளை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது... இந்த அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசுடன் உருப்படியான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கவே இல்லையே ஏன்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்ற உறுதிமொழி என்னாயிற்று?
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை அத்துமீறி கைது செய்யப்படுகிற போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு எழுதுகிற கடிதங்களுக்கு இந்திய பேரரசு கொடுக்கிற மதிப்புதான் என்ன?
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்படுகிற மீனவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தியர்கள் என்பதால்தானே குஜராத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடி படாதபாடுபட்டு எதிரி நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் விடுதலைக்கு தீர்வு காண்கிறார்...
அப்படியானால் குஜராத் மீனவர்கள்தான் இந்திய குடிமக்களா? தமிழகத்து மக்கள் என்ன வேறு தேசத்து குடிமக்களா? பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் குஜராத் மீனவர்களை விடுவிக்க முடிகிற மத்திய அரசால் .....
மற்றொரு அண்டைநாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முடியாதா? தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாதா? இதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தமிழகத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே கருதாத இந்திய மத்திய பேரரசுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் தக்க பாடம் புகட்டுகிற காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையும் எச்சரிக்கையாக சுட்டிக்காட்டுகிறேன்.
ஆகையால் இந்தியாவுக்கான இலங்கை தூதரை உடனே அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என எச்சரித்து- இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்யவு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எ

Read more...

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து

செவ்வாய், 30 ஜூன், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள அறிக்கை: 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூழ்ச்சிகளால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மக்களுக்கான ஒரு நல்லரசாக முன்னுதாரணம் மிக்க ஆட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடத்தி வருகிறார். அவரது வரலாற்று வெற்றிக்கும் சாதனைக்கும் எதிரிகளால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சவாலையும் எதிர்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக மாண்புமிகு முதல்வர் அவர்கள் களமிறங்கினார்.. அவரை மக்கள் மன்றத்தில் தேர்தலில் எதிர்கொள்ள திராணியற்ற எதிர்க்கட்சிகள் புறமுதுகிட்டு ஓடின. இன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன.. மக்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.. 

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத வகையில் வெற்றி வாகை சூடியுள்ளார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்திட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமது 'நன்றி' அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமே. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும்.. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மாண்புமிகு முதல்வர் அவர்களே மக்கள் பணியைத் தொடருவார்.. தமிழினமும் தமிழகமும் இழந்த வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கவும் வென்றெடுக்கவும் மக்களுக்கான நல்லாட்சிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தொடர்ந்து தலைமை வகிப்பார் என்பதுதான் தமிழக மக்களின் பெருவிருப்பம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இத்தகைய சரித்திரம் பேசுகிற மகத்தான வெற்றியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த அத்தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலின் தேர்தல் சரித்திரத்தில் மிகப் பெரும் சாதனை வெற்றியை பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்தலைவர்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கடலூர் பகுதியில் சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்

வெள்ளி, 19 ஜூன், 2015

சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்! 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: 

''கடலூர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (18.06.2015) இரவு வீசிய சூறைக்காற்றினால் கடலூர் அருகே மலைக்கிராமங்களான ராமாபுரம், கிழக்கு ராமாபுரம், கண்ணாரபேட்டை வழிசோதனைப்பாளையம், ஓதியடிக்குப்பம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், எம்.புதூர், எஸ்.புதூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் பெரும் சேதமடைந்தன. குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் இந்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று மாவட்டம் முழுவதும் திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளது என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த வாழை மரங்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சேதமடைந்துள்ளது. இதேபோல், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த மழையால், வடக்குப்பம் மற்றும் சின்னவடவாடி கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை, சாமந்திப்பூ பாதிப்பு அடைந்துள்ளது. முருங்கைகள் வேரோடு சாய்ந்தன. சாமந்திப்பூக்களும் மண்ணில் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more...

மத்திய அரசு நடப்பாண்டில் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ள 6 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 11 ஜூன், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 11.06.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
’’நடப்பாண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ6 ஆயிரம் கோடியை வட்டியில்லாத கடனாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த ஆண்டே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ500 கோடிக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டும் மத்திய அரசு இதேபோல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ6 ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடனாக வழங்கியிருந்தது.

ஆனால் சர்க்கரை ஆலைகளோ மத்திய அரசிடம் இருந்து இந்த தொகையைப் பெற்றுக் கொண்டு தங்களது பிற தொழில் நிறுவனங்களில்தான் முதலீடு செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் அடித்தததே தவிர ஏழை விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை.
இத்தகைய தனியார் சர்க்கரை ஆலைகளின் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயலால் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து கரும்பையும் சர்க்கரை ஆலைகளிடம் கொடுத்துவிட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாமல், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் பெருந்துயரத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதற்காக, விவசாயிகளுக்கு நியாயமாக சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நடப்பாண்டும் ரூ6 ஆயிரம் கோடியை 'விவசாயிகளுக்கு வழங்குவதற்காக' சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் இம்முறை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தனியார் சர்க்கரை ஆலைகளால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த செய்திகள் ஆறுதலைத் தந்தாலும் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ரூபாய் கூட நிலுவையின்றி வழங்க வேண்டியது சர்க்கரை ஆலைகளின் முதன்மையான கடமை. இம்முறையும் கடந்தாண்டுகளைப் போல தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்து விவசாயிகளை ஏமாற்றுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு இந்த நிலுவைத் தொகை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மத்திய அரசு தனியார் சர்க்கரை ஆலைகளை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இதில் தமிழக அரசும் தலையிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும் முழுமையாக சென்று சேர உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.’’

Read more...

ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை - ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 28 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 28.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மியான்மரிலும் பவுத்த பேரினவாத வெறியாட்டம்! பல்லாயிரம் சிறுபான்மை இனத்தவர் படுகொலை!! 

அகதிகளாக இலட்சக்கணக்கானோர் தத்தளிப்பு! ஐநாவே இனப்படுகொலையை தடுத்து நிறுத்து!

சர்வதேச நாடுகளே அடைக்கலம் கொடு!! ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கிடு!!


இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மலேசியாவில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இத்தகைய கொடூர அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறைகளில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மியான்மரை விட்டு தரைவழியாக, கடல் வழியாக கண்ணுக்கெட்டிய திசையெங்கும் வழியெங்கும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாள்தோறும் தப்பி ஓடுகின்றனர்..
அப்படி தப்பி ஓடுகிற அப்பாவிகளை ஈவிரக்கமற்ற அண்டைநாடுகள் அகதிகளாக ஏற்க மறுத்து நடுக்கடலிலே, கொடும் வனங்களிலே தத்தளிக்க விடுகின்றன.. இந்த அநியாய அரசுகளின் பாராமுகத்தால் பசி பட்டினியால் நடுக்கடலி, எல்லைக் காடுகளில் ஆயிரமாயிரம் பேர் செத்து மடிகிறார்கள்..
இதனிலும் உச்ச கொடூரமாக இப்படி தாய்மண்ணை விட்டு, உடைமைகளை உறவுகளை இழந்து உயிர் பிழைக்க தப்பி ஓடுகிற அப்பாவிகளை 'ஆட் கடத்துகிற' கும்பல்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றன.. இந்த காட்டுமிராண்டிகளின் பிடியில் சிக்கி மடிந்து போனவர்கள் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இடுகாடுகள் எல்லையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேரதிர்ச்சியும் நெஞ்சை உறைய வைக்கும்படியான செய்திகள் வந்து கொண்டுகின்றன.
இந்தியா, வங்கதேசம் நாடுகளில் இருந்து குடியேறியவர்களே ரோஹிங்கியா எனும் சிறுபான்மை இனத்தவர் என்பதாலேயே அந்த மியான்மர் மண்ணைவிட்டு ஓடஓட துரத்தப்படுகிறார்கள்.. சொந்த நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்..
ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணிலே நாதியற்றவர்களாக பவுத்த பேரினவாதம் பலிகொண்டபோது வாய்மூடி மவுனமாக இருந்த சர்வதேசம் இப்போதும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையையும் கண்டும் காணாமல் இருப்பது வெட்கக் கேடானது..
நாடுகளின் அரசுகளின் சொந்த சுயலாபங்களுக்காக கொத்து கொத்தாக சிறுபான்மை இனங்கள் இப்படி வேட்டையாடப்படும் போது தடுக்க வேண்டிய தேசங்கள். தேசாந்திரிகளாக தப்பி ஓடுகிறவர்களை மனிதர்களாக கூட மதித்து அரவணைக்காதிருப்பது மனித குலத்தின் மாந்தநேயம் மரித்துப் போனதையே வெளிப்படுத்துகிறது...
இந்திய தேசமாவது ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைக்க வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் முழுமையான ஈடுபாட்டோடு தலையிட்டு ரோஹிங்கியா சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அதன் கடமை!
மனித நேயமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த தென்னாசியாவிலேயே விரிவாக்கம் பெற்று வருகிற பவுத்த பேரினவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து அரச பயங்கரவாதங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

தமிழக முதல்வராக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வாழ்த்து

வெள்ளி, 22 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 22.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி :
தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்று  தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்திட மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்!

சதிகளை தகர்த்து சரித்திரம் படைத்து நல்லாட்சியை தொடர்ந்து வழங்கிட மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்கள் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தி வந்துள்ளது.
உலகத் தமிழினமே கையறு நிலையில் நின்ற போது, இதோ உங்களுக்காக இந்த தமிழக அரசு இருக்கிறது என்று தாயுள்ளத்தோடு ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு உற்ற துணையாக ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்து பேராறுதலையும் பெருநம்பிக்கையும் அளித்ததை தமிழினம் என்றென்றும் நன்றியோடு நினைவில் கொள்ளும்..
அதேபோல் 23 ஆண்டுகாலம் தூக்கு கொட்டடியில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மற்றும் ஆயுள்சிறைவாசிகளாக இருந்த நளினி உள்ளிட்ட நால்வர் என 7 தமிழர்களையும் விடுதலை செய்வதாக மற்றுமொரு மாந்தநேயமிக்க ஒட்டுமொத்த தமிழினமே உச்சிமோந்து வரவேற்று கொண்டாடிய சரித்திரம் மிக்க தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்..
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்து ஆற்று நீர் உரிமை பிரச்சனைகள் உள்ளிட்ட வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் உறுதியான அனைத்துவகையான போராட்டங்களையும் முன்னெடுத்தது மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.
இடையிலே சிறிது காலம் எதிரிகளின் சதிகளால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லாட்சிக்கு இடையூறு ஏற்பட்ட போதும் அந்த தடைகளையெல்லாம் தகர்ந்து எறிந்துவிட்டு மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரியாசனத்திலே அமர இருக்கிறார்கள்.. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கிட மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தற்போது நான் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு கலந்து கொண்டு வருகிறேன்.. இங்குள்ள உலகத் தமிழர் இயக்கங்கள், தமிழின உறவுகள் அனைத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து பேருவகையும் பெருமகிழ்வும் அடைந்து வருவதையும் தங்களது மேலான பார்வைக்கும் கொண்டு வருகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் அவரது தலைமையிலான தமிழின நலன் காக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் உறுதுணையாக அரணாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு மீண்டும் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழினத்தின் சார்பாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

Tamizhaga Vazhvurimai Katchi (TVK) leader Panruti T.Velmurugan reached France for the 6th Mullivaikkaal Memorial commemoration

புதன், 13 மே, 2015

Tamizhaga Vazhvurimai Party leader Mr.T. Velmurugan arrived at the city of Paris on 12th May to participate in the 6th commemorate event of Mulliavaikkaal along with the diaspora eelam Tamil.
France Tamil Coordinating Committee and France Tamil National Alliance council activists together welcomed his from the Paris airport with Eelam Tamil national flag. Mr. Velmurugan will participate in the commemorate event of the 6th Mullaivaikkaal genocide conducted on the Eelam Tamils to be held on 18th May in Paris and is also very enthusiastic to meet the Eelam Tamils in Europe.


Read more...

பாரிஸில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பிரான்ஸ் சென்றடைந்தார்

பாரிஸில் 18.05.2015 அன்று நடைபெறும் முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை புலம்பெயர் தொப்புள் கொடி உறவுகளுடன் இணைந்து நினைவு கூற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி திரு தி.வேல்முருகன் அவர்கள் 12.05.2015 அன்று பிரான்சு-பாரிஸ் நகரை சென்றடைந்தார்.
பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயல்பாட்டாளர்கள் மற்றும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை செயல்பாட்டாளர்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் சென்று பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை வரவேற்றார்கள். பாரிஸில் மே 18 ஆம் தேதி நடைபெறும் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொள்வதுடன் ஐரோப்பாவில் ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்க மிக ஆர்வத்துடன் உள்ளதாக பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.



Read more...

சொத்து குவிக்கு வழக்கில் செல்வி ஜெ.ஜெயலலிதா கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை - தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்த மாண்புமிகு புரட்சித் தலைவிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து

திங்கள், 11 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 11.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்த மாண்புமிகு புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள்!! மீண்டும் முதல்வராகி நல்லாட்சி தொடர வாழ்த்துகள்!! 

தமிழகத்தின் தீயசக்திகள் ஒன்று திரண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களுக்கு எதிராக தொடர்ந்த பொய்வழக்கு உடைத்து நொறுக்கப்பட்டு இன்று நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.. தர்மம் வென்றுள்ளது. 

தமிழகத்தின் நலன் ஒன்றே தம் ஒற்றை வாழ்க்கையாக தவமாக வாழ்ந்து வரும் மாண்புமிகு புரட்சித் தலைவியை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என பகல் கனவு கண்ட நிலையில் பல்லாண்டுகாலம் பொய் வழக்குகளால் தமிழின துரோகிகள் துன்புறுத்தி வந்தனர். இந்த பொய்வழக்குகளில் இடைக்காலத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் தங்களுக்கான வெற்றி என்ற மமதையில் துள்ளி திரிந்தனர்.. 

ஆனால் எத்தனை இடர்பாடும் துயரமும் வந்த போதும் தமிழக மக்களே தம் உயிராக மதிக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டத்தின் துணை கொண்டு சதிகாரர்களை எதிர்கொண்டார்.. இதோ இன்று நீதி வென்றுள்ளது.. சட்டம் நியாயத்தின் பக்கம் நிமிர்ந்து நிற்கிறது.. தர்மம் வென்று தலைநிமிர்ந்துள்ளது.. 

உலகத் தமிழினம் மகிழ்ச்சியில் திளைக்கிறது... தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மீண்டும் முதலமைச்சர் அரியாசனத்தில் அமர இருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா

செவ்வாய், 5 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம், சிராங்குப்பத்தில் நடந்தது. கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சின்னதுரை, முடிவண்ணன், மாநில துணை பொதுச் செயலாளர் உ.கண்ணன், தமிழர் படை அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சாமிதுரை வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் பாலமுருகன், கிளைச் செயலர் ராஜேந்திரன் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கி பேசினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோபிசெட்டிபாளையம் நகர செயற்குழு கூட்டம்

திங்கள், 4 மே, 2015


Read more...

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்!! கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 11.05.2015 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

ஞாயிறு, 3 மே, 2015

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்!! கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!! 
நாள்: 11.5.2015 
இடம்: சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் 'பொன்விழா'வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.. இந்த விமான நிலையத்தின் மேற்கூரைகளும் கட்டுமானப் பணிகளும் இடிந்து விழுந்து பயணிகள் படுகாயமடைவது என்பது தொடர் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசும் விமானப் போக்குவரத்துத் துறையும் இதுபற்றி கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமலே இருக்கிறது.
நேபாளத்தை புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போதுகூட அந்நாட்டின் காத்மண்ட் விமான நிலையம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை; அந்த விமான நிலையத்தை பயன்படுத்தியே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
நேபாளத்து எல்லையில் இருக்கிற மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிப்பு ஏற்பட்ட போதும் அதன் அருகே உள்ள பக்டோரா விமான நிலையம் பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் வெளியாகவில்லை.
ஆனால் நிலநடுக்கம் உட்பட எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமலேயே சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் இதுவரை 45 முறை இடிந்து விழுந்து இருக்கின்றன.. பயணிகளை படுகாயப்படுத்தி இருக்கிறது..
இத்தனை முறை பாதிப்பு ஏற்பட்டும் மத்திய அரசும் அதன் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் விமான நிலையமும் இப்படி மோசமாக கட்டப்பட்டதில்லை.
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் குஜராத் மாநிலத்தின் பூஜ் பிரதேசம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம். அங்கு கூட இப்படி ஒரு மோசமான நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் இல்லை.
ஆனால் சென்னை விமான நிலையம் மட்டும்தான் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 45 முறை இடிந்து விழுந்தும் கூட அதனை சீரமைக்க ஒரு நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படவில்லை. இந்த விமான நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனம் மீது ஒரு சிறு நடவடிக்கையும் இல்லை...
'மேக் இன் இந்தியா' என்ற பெயரில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று தம்பட்டம் அடிக்கிற மத்திய அரசு, தென்னிந்தியாவின் முதன்மையான சென்னை விமான நிலையம் நாள்தோறும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையில்தான் கேளா காதாக இருக்கும் மத்திய அரசு இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட அக்கறையற்று இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகையால் சென்னை விமான நிலையத்தை உடனே சீரமைக்க வேண்டும்; சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் 45 முறை இடிந்து விழுவதற்கு காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விமான நிலையம் முன்பாக வரும் மே 11-ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்


தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

ண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 1 மே, 2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம்! எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே திரும்பப் பெறு!! 

 பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மிக மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவர அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்த போதும் கூட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை... 

சர்வதேச சந்தை நிலவரம், ரூபாய் மதிப்பு போன்ற காரணங்களைக் கூறிக் கொண்டு மக்களின் அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் விலையை கண்மூடித்தனமாக அதிகரிப்பது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது. மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திடீரென பெட்ரோல், டீசல் விலையை 50 காசுகள், ரூ1 என குறைப்பது போல சில மாதங்கள் அறிவிப்பதும் பின்னர் ஒட்டுமொத்தமாக கடுமையாக உயர்த்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் யதார்தத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக மிகவும் கடுமையாக உயர்ந்தே இருக்கிறது என்பதே நிதர்சனம். 

இத்தகைய போக்கினால் அத்தியாவசிய பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்து ஏழை எளிய நடுத்த மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வைக் குறைப்போம்; கட்டுப்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதி தந்த மத்திய அரசு தற்போது, எண்ணெய் நிறுவனங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு கையை விரிப்பது தங்களது கடமையில் இருந்து தப்பி ஓடுகிறது என குற்றம்சாட்டுகிறேன். பொதுமக்களை மிகக் கடுமையாக பாதிக்கிற இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; அத்துடன் இத்தகைய பொதுமக்களை பாதிக்கிற வகையில் விலை நிர்ணயம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை மத்திய அரசு திரும்பப் பெற்று தம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 

அன்புடன் 
பண்ருட்டி தி. வேல்முருகன் 
தலைவர், 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழர் நீதிப் பேரணியில் உயிழிரிழந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வினோத் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி

புதன், 29 ஏப்ரல், 2015

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதி விசாரணை நடத்திட வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுப்பதற்காக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் 28.04.2015 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழர் நீதிப் பேரணியில் எங்கள் கட்சிக் கொடியுடன் கலந்து கொண்ட சிதம்பரம் பகுதி சேர்ந்த திரு.ரவி அவர்களது மகன் திரு. வினோத் வயது-21 அவர்கள் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த மின் விபத்தில் மரணமடைந்தார் ஏழ்மையில் வாடும் அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்தமிழக வாழ்வுரிமை க் கட்சியின் நிறுவனத் தலைவர்  தி.வேல்முருகன் 29.04.2015 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற வினோத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, வினோத்தின்  குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...






Read more...

தமிழர் நீதிப் பேரணியில் ரயில்வே துறையின் உயர் மின்னழுத்த கம்பியின் மின்சாரம் தாக்கியதில் வீரச்சாவடைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திரு.வினோத் அவர்களின் குடும்பத்தினருக்கு தி.வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் - வினோத்தின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு



தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான தி.வேல்முருகன் இன்று (29.04.2015) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
ஆந்திரத்தில் இருபது ஏழைத் தமிழர்கள் மோதல் என்ற பெயரில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று (28.04.2015) சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற தமிழர் நீதிப் பேரணியில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தமிழ் இளைஞனின் உயிர் பறிபோன செய்தியை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிதம்பரத்தைச் சேர்ந்த வினோத் (வயது 21) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துடிப்புமிக்க செயல்வீரர். தன் தோழர்களோடு பேரணியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தவர் இன்று உயிரற்ற உடலாக ஊர் திரும்புகிறார். அவரையும் அவருடைய தம்பியையும் பேரணிக்கு வாழ்த்தி வழியனுப்பிய தாயும் தந்தையும் அண்ணனின் சடலத்தோடு தம்பி மட்டும் திரும்பி வருவதை எப்படித் தாங்குவர்?
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவனாகிய எனக்கும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கும் இது தாங்கவொண்ணாத் துயரம். எளியோனாகிய என் அழைப்பை ஏற்றுத் தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கும் ஒற்றைச் சிந்தனையோடு பேரணியில் பங்கு பெற்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கும் செயல்வீரர்களும் எங்கள் சோகத்தைப் பகிர்ந்து நிற்பது அறிந்து ஆறுதல் கொள்கிறோம்.
வினோதின் சாவு விபத்துதான் என்றாலும் இதைத் தவிர்த்திருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஏப்ரல் 28பேரணிக்கு அனுமதி கேட்டு ஏப்ரல் 11ஆம் நாளே விண்ணப்பித்து விட்ட போதிலும் சென்னை மாநகரக் காவல் துறை அதிகாரிகள் கடைசிவரை இழுத்தடித்து விட்டு, ஏப்ரல் 27 இரவுதான் கிண்டி குதிரைப் பந்தயச் சங்கப் பகுதியில் பேரணி நடத்த இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
பல்லாயிரம் மக்கள் அந்தக் குறுகிய பகுதியில் திரண்ட போதிலும் எவ்வித ஆபத்துக் கால முன்னெச்சரிக்கை ஒழுங்கும் செய்யப்படவில்லை. ஒரு தீயணைப்பு ஊர்தியோ அவசர சிகிச்சை ஊர்தியோ எதுவும் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. கடுமையான நெரிசலும், காவல்துறை கெடுபிடியும் சேர்ந்து கொள்ள, நகரவோ நிற்கவோ கூட இடம் போதாமல் மின் தொடர்வண்டிப் பாதையோரத் தடுப்பைத் தாண்டி நெருக்கித் தள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் வினோத். அப்போது அவர் கையிலிருந்த கொடிக் கம்பத்தை யார் மீதும் இடித்து விடாமல் உயர்த்திப்பிடித்த போது மின் கம்பியில் படப் போய், அந்தோ, உயரழுத்த மின்சாரம் அவர் உடலில் பாய்ந்து விட்டது. அரசினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவர்கள் பெருமுயற்சி செய்தும், இன்று காலை 7 மணியளவில் வினோதின் உயிர் பிரிந்தது.
வினோதை இழந்து வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயரத்தில் உடன்நின்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கு நன்றி! மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தத் துயர நிகழ்வைப் பாடமாகக் கொண்டு இனிவரும் காலத்தில் காவல்துறையும் மனித உரிமைகளையும் மனித உயிர்களையும் மதித்து நடக்க வேண்டுகிறேன்.
குறிப்பு: இன்று (29.04.2015) 5 மாலை மணியளவில் சிதம்பரத்தில் உள்ள வினோத் அவர்களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்க இருக்கிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்களும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்திட வேண்டுமென தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கேட்டுக்கொள்கின்றேன்.

Read more...

20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 28.04.2015 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் தமிழர் நீதிப் பேரணி

திங்கள், 27 ஏப்ரல், 2015

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி
இருபது தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி
அன்புடையீர் ,வணக்கம் 
சென்ற ஏப்ரல் 6ஆம் நாள் நள்ளிரவில், 7ஆம் நாள் அதிகாலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டம் திருப்பதி வனப்பகுதியில் இருபது ஏழைத் தமிழர்களின் உயிரைப் பறித்தது மோதல்சாவு அல்ல, பொய்மோதல் படுகொலைதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது. கொல்லப்பட்டவர்களில் பலரையும் தமிழகத்திலிருந்து ஆந்திரக் காவல் படை கடத்திச் சென்றதற்கும், அவர்களைக் கொடிய முறையில் சித்திரதை செய்த பிறகே படுகொலை செய்ததற்கும், ஓரிடத்தில் கொன்று பிறிதோரிடத்தில் பிணங்களை வீசியதற்கும் மறுக்க முடியாத சான்றுகள் வெளிவந்து விட்டன.
“செம்மரம் வெட்டியதால் சுட்டோம், இனியும் சுடுவோம்” என்று ஆந்திர வனத்துறை அமைச்சரே இறுமாப்புடன் அறிவிக்கிறார். உயிரிழந்த ஏழைத் தமிழர்களுக்காகத் துயரம் தெரிவிக்கும் பண்பு கூட ஆந்திர அரசுக்கு இல்லை. மோதல்-சாவு நேரிடும் போதெல்லாம் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றக் கட்டளையைக் கூட ஆந்திர அரசு மதிக்க வில்லை என்பது ஆந்திர உயர் நீதிமன்றத்திலேயே வெளியாகி விட்டது.
நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு ஆந்திரப் படுகொலை குறித்து வாயே திறக்கவில்லை. ஒழுக்கம் தவறியவள் என்று ஒருத்தியைக் கல்லால் அடித்துக் கொல்ல நினைத்தவர்களிடம் “குற்றமில்லாதவன் முதல் கல்லை வீசட்டும்” என்று இயேசு கிறிஸ்து அழைத்தது போல் நாம் இப்போது அழைத்தால் கல்லெடுத்துப் போட எந்த அரசுக்கும் தகுதியில்லை. மோதல் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து எந்த அரசும் தப்ப முடியாது. அதிலும் மோதல்-படுகொலைகளுக்குப் பேர்போன மாநிலம் ஆந்திரம். பேர்போன முதல்வர் சந்திரபாபு நாயுடு.
1) நடந்த கொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், குற்றமிழைத்த காவல் படையினர் மீதும் அவர்களுக்கு ஆணையிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மீதும் கொலை மற்றும் சதி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இவ்வழக்கின் புலனாய்வை நடுவண் புலனாய்வு நிறுவனத்திடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்க வேண்டும்.
2) உண்மையான செம்மரக் கடத்தல் குற்றவாளிகளையும், மோதல் படுகொலை பற்றிய உண்மையையும் கண்டறிந்து வெளிப்படுத்தபொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
3) செம்மரக் கடத்தல் வழக்குகளில் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மரம் வெட்ட அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருக்கும் (சரியாகச் சொன்னால் காணாமலடிக்கப்பட்டிருக்கும்) நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் இருபத்து ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஆந்திர அரசிடம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்காவது தமிழக அரசு வேலை கொடுக்க வேண்டும்.
5) பிழைப்புத் தேடி உயிரைப் பணயம் வைத்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நிலைக்கு நிர்ப்பந்திக்கும் சமூகப் பொருளியல் காரணிகளைக் களைவதற்குத் தமிழக அரசு அவசரத் திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டும்.
கொலைகார ஆந்திர அரசையும், கொலைக்கு உடந்தையான இந்திய அரசையும் கண்டித்தும், மேற்கண்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்ற 28.04.2015 செவ்வாய்க் கிழமை மாலை 3மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடைபெறும். தமிழக கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் இப் பேரணிக்கு சாதி மத கட்சி எல்லைகளை கடந்து தமிழர்களாய் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு வருக!

அன்புடன்
தி.வேல்முருகன்
ஒருங்கிணைப்பாளர் 
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

Read more...

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஹரிதாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில துணை பொது செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான தஞ்சை தமிழ்நேசன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் திருவையாறு கஜேந்திரன், தஞ்சை சேகர், அம்மாப்பேட்டை தமேந்திரன், மாவட்ட நிர்வாகி சுரேஷ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி நிர்வாகி வெங்கடேசன் நன்றி கூறினார். 
20 அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் மாபெரும் தமிழர் நீதி பேரணி வரும் 28ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை பனகல் மாளிகையிலிருந்து தொடங்கி கிண்டி ஆளுநர் மாளிகை வரை நடக்கிறது. கொலைக்கார ஆந்திர அரசையும், கொலைக்கு உடந்தையான மத்திய அரசையும் கண்டித்து நடக்கும் பேரணியில் தஞ்சை மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

புதன், 22 ஏப்ரல், 2015

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் ருக்மான்ஹக்கீம், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் அப்துல்கபூர், ஒன்றிய தலைவர் கௌஸ்பாட்சா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more...

கல்லூரி, பள்ளி வாகன ஓட்டுநர்களாக குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆண்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாகக் கூறி சுட்டுக்கொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அவர்களை சுட்டுக்கொலை செய்த ஆந்திர காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும், அண்மையில் திட்டக்குடி பகுதியில் கல்லூரி வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். கல்லூரி, பள்ளி வாகன ஓட்டுநர்களாக குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆண்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மங்களூர் ஒன்றியச் செயலாளர் சுரேந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் பாலமுருகன், மங்களூர் ஒன்றியத் தலைவர் முருகன், அமைப்புச் செயலாளர் ஆனந்தி, அமைப்பாளர் பூமாலை, நகரத் தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP