Blogger இயக்குவது.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

புதன், 27 ஏப்ரல், 2016

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தேர்தல் பிரச்சார புகைப்படங்கள்









Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேட்புமனு தாக்கல்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016



நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்று நேற்று (25.04.2016) வேட்புமனு தாக்கல் செய்தார்.














Read more...

சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டிடும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டிடும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
01. ஆத்தூர் - திரு.ஆர்.பி.தமிழ்நேசன் (தென்மண்டல பொறுப்பாளர்),

02. ராமநாதபுரம் - திரு.செ.செரொன்குமார் (தென்மண்டல இளைஞரணிச் செயலாளர்),
03. சிவகங்கை - திரு. மலை.சரவணராமகிருட்டிணன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்),
04. சங்கரன்கோவில் (தனி) - திரு.மா.முத்து (மாவட்டப் பொருளாளர்)
05. விருதுநகர் - திரு.பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்)
06. தூத்துக்குடி - திரு.அ.ந.கிதர்பிசுமி (மாவட்டச் செயலாளர்)
07. நாகர்கோவில் - திரு.சோ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்)
08. ஒட்டபிடாரம் (தனி) - திரு.தி.ரோபி பிரபாகரன் (மாவட்டத் தலைவர்)
09. சிவகாசி - திரு.தங்க.சரவணராஜ் (மாவட்டச் செயலாளர்)
10. மதுரை வடக்கு - திரு.சு.கருப்பையாபாண்டியன் (மாவட்டப் பொறுப்பாளர்)
11. திருச்சி கிழக்கு - திரு.கி.ராயல் ராசா (மாநகர் மாவட்டச் செயலாளர்)
12. முசிறி - திரு.க.கலைசெல்வன் (புறநகர் மாவட்டச் செயலாளர்),
13. நாங்குநேரி - திரு.முருகேசன் (ஒன்றியச் செயலாளர்)
14. அருப்புகோட்டை - திருமதி. வீரலட்சுமி மாரிச்சாமி (ஒன்றிய மகளிரணிச் செயலாளர்)
15. கும்பகோணம் - வா.செ.பிரபு (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
16. வேதாரண்யம் - சு.நித்தியானந்தம் (மாவட்டச் செயலாளர் - தெற்கு),
17. திருமயம் - அ.பழனிச்சாமி (நகரச் செயலாளர்),
18. திண்டுக்கல் - திருமதி. ஜெயராணி பிலிப்தாசு (மாவட்ட மகளிரணிச் செயலாளர்)


Read more...

பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (13.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசே! பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு
10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்க!

சிறப்பு முகாம்களை இழுத்து மூடி ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்திடுக!!


பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்தாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளை முன்னிட்டு 10 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த அனைத்து சிறை கைதிகளையும் தமிழக அரசு கருணையுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
சிறைச்சாலைகள் என்பது தவறு செய்தோர் தண்டனை அனுபவிக்கும் இடம் என்பதுடன் அவர்களை சீர்திருத்தும் இடமும் கூட.. இந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த கைதிகளை கருணையுள்ளத்துடன் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இதேபோல் 10 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அப்போதைய தி.மு.க. அரசு, 7 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளையே கூட விடுதலை செய்திருக்கிறது என்ற முன்னுதாரணத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதேபோல் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 14 ஈழத் தமிழர்களையும் செய்யாறு சிறப்பு முகாமில் உள்ள 4 ஈழத் தமிழர்களையும் மனிதாபிமானத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தப்பி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழகத்துக்கு அடைக்கலமாக வந்தவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஆகையால் இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் எனது தலைமையில் திருச்சியில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியிருந்தோம்.
இந்த நிலையில் இன்றும் கூட திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 5 ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் இருப்பது உலகத் தமிழர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகையால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளையொட்டி 10 ஆண்டுகாலம் சிறையில் வாடும் அனைத்து கைதிகளுடன் இந்த சிறப்பு முகாம்களளயும் இழுத்து மூடி அந்த முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


Read more...

மத்திய அரசு சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (01.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

சுங்கக் கட்டண குறைப்பு எனும் ஏமாற்று வித்தையை அரங்கேற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்!!

சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுக!

சுங்க சாவடிகளில் கட்டணம் தர மறுக்கும் "ஒத்துழையாமை" போராட்டம் நடத்தப்படும்!
நாடு முழுவதும் 60 சுங்க சாவடிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் 2.5 விழுக்காடு சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கை.
சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணத்தை மிக மிகக் கடுமையாக உயர்த்துவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஒரு அரசு என்பது மக்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளில் சாலை வசதியும் ஒன்று.
ஆனால் இந்த அடிப்படை வசதியை மக்கள் பயன்படுத்துவதற்கும் கூட சுங்கக் கட்டணம் என்கிற பகல் கொள்ளை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 44 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்க சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், 18 சுங்க சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இருப்பினும் கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பார்க்கும் வகையில் நடுத்தர, ஏழை மக்களின் பணத்தை சுரண்டுகிற வகையில் தொடர்ந்து 15 சதவீத அளவில் சுங்கக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதே அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு.. அப்படியான எந்த ஒரு வசதியையும் செய்துதராமலேயே கட்டணம் எனும் பகல் கொள்ளையை அரங்கேற்றுவதில்தான் வழிப்பறி செய்வதில்தான் தனியார் நிறுவனங்கள் குறியாக இருந்து வருகின்றன. மத்திய அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றுகிற மாபெரும் முற்றுகைப் போராட்டங்களை 2 முறை நடத்தியிருக்கிறது. தற்போது திடீரென சுங்கக் கட்டணத்தை வெறும் 2.5 விழுக்காடு குறைக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு என்பது 15 விழுக்காடுக்கும் அதிகமாம்.. குறைப்பது என்கிற போது மட்டும் வெறும் 2.5 விழுக்காடா?
பொருளாதாரக் குறியீட்டு எண்படி இந்த சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உண்மையில் பொருளாதார குறியீட்டு எண்ணின்படி 7.5 விழுக்காடு கட்டணத்தைத்தான் மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும். அதுவும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இந்தக் கட்டணக் குறைப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாமல் வெறும் 60 சுங்கச் சாவடிகளில் 2.5% சுங்கக் கட்டணம் குறைப்பு என்பது ஏமாற்று வித்தைதானே தவிர வேறு எதுவும் இல்லை என வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆகையால் மத்திய அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து விரைவில் சுங்கக் கட்டண முறையையே ஒழிக்க வேண்டும்; அத்துடன் இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் எவ்வளவு? அந்த கட்டணத்தில் இருந்து சாலையை பயன்படுத்துகிற மக்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன? இன்னும் எத்தனை ஆண்டுகாலத்துக்கு இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்? என்ற விவரங்களை அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து, சுங்கக் கட்டண வசூல் தொடர்பான முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிடாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் "சுங்கக் கட்டணத்தை செலுத்த மாட்டோம்" என்ற ஒத்துழையாமை இயக்கத்தை பொதுமக்களை ஒன்றுதிரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளை முற்றுகையிட்டு மாபெரும் தொடர் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.வேல்முருகன் அறவிப்பு

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் 14.08.2015 இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வாழ்வுரிமைக்காக போராடும் என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாபெரும் தொடர் போராட்டம்!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 26வது நாளாக நீடிக்கிறது. இன்று முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டிய ஊதிய மாற்று பேச்சுவார்த்தையானது 43 மாதங்கள் கடந்த நிலையிலும் பேச்சுவார்த்தையாகவே தொடர்கிறது. தொழிலாளர்களின் நியாயமான முறையான கோரிக்கையை பற்றி எந்த ஒரு அக்கறையுமேயே இல்லாமல் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் என்.எல்.சி. நிர்வாகம் நடந்து கொள்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடன் போராடிப் பார்த்து தற்போதுவிட்டு தற்போதும் 26 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகமோ தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஈவிரக்கமற்று காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் அடக்குமுறையை ஏவிக் கொண்டிருக்கிறது..
இதன் உச்சமாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் திருமாவளவனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து அதிகார மமதையை என்.எல்.சி. நிர்வாகம் வெளிப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகாலம் புதியஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை; போராடுகிற தொழிலாளர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்க தயாரில்லை என்பது வெட்கக் கேடானது; மத்திய அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது.
தற்போது நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒருசேர தங்களது வாழ்வுரிமைக்காக போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் துயரம் சொல்லி மாளாதது. ஒட்டுமொத்தமாக நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்கள் அனைத்திலும் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு பதற்றமான நிலைமையே உருவாகியுள்ளது.
இந்த நிலை நீடிக்குமேயானால் என்.எல்.சியில் மின் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியாவே இருளில் மூழ்கிவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் அசாதரணமான நிலைமை மிகப் பெரும் போராட்டமாக எந்த நேரத்திலும் வெடிக்கவும் செய்யும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
போராடுகிற தொழிலாளர்களுடன் நியாயமான முறையில்பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டிய என்.எல்.சி. நிர்வாகம் சட்டாம்பிள்ளைத்தனமாக தொடர்ந்து அடாவடியாக செயல்பட்டு வருவதை உடனே நிறுத்த வேண்டும்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிற நிர்வாகம், என்.எல்.சி. தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிடுகிற, அராஜகப்போக்குடன் நடந்து கொள்கின்ற என்.எல்.சி. தலைவர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்கள், இல்லங்களை தொழிலாளர் தோழர்கள், பொதுமக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் தொடர் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனே தலையிட்டு சுமூகத் தீர்வு காண உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்

Read more...

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் - கரூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

புதன், 12 ஆகஸ்ட், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வார், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம், காந்தியவாதி சசிபெருமாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

1. மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் ராமேஸ்வரம் பகுதியில் உயர் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்; அவர் பிறந்த ராமேஸ்வரத்தின் வங்கக் கடல் பகுதியில் மிக பிரமாண்டமான முழு உருவச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது. 

2. மது ஒழிப்புப் போராட்ட களத்திலேயே உயிரைத் தியாகம் செய்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாளின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும் தமிழகத்துக்கு உரிய நீர் திறந்துவிடப்படவில்லை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகிறார். இந்திய நாட்டின் மத்திய அமைச்சராக இருக்கும் சதானந்த கவுடாவும் இந்த மேகதாதுவால் தமிழகத்துக்கு பாதுகாப்புதான் என கூறி வருகிறார். சதானந்த கவுடா ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்குமான அமைச்சர் என்பதை மறந்துவிட்டு கர்நாடகாவின் பிரதிநிதிபோல் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

4. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்; மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அணை கட்ட கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று இந்த செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

5. தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை உடனே நியமித்து அணையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. நெய்யாறு அணையில் இருந்து உரிய நீரை கேரளா திறந்துவிட தமிழகம் மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த செயற்குழுக் கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்திருப்பதை இச்செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களையே விடுதலை செய்துள்ள நிலையில் ராஜிவ் காந்தி வழக்கில் கால் நூற்றாண்டுகாலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் ஆணித்தரமான வாதத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியுடன் வரவேற்கிறது. இனியும் 7 தமிழர் விடுதலையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் போல் முட்டுக்கட்டைப் போட்டு குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்காமல் 7 தமிழரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நல்லெண்ண நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.

8. சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் கொடுமை நீடிக்கிறது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது துப்பாக்கிச் சூடு நடத்துதல், சிறைபிடித்தல், வலைகளை அறுத்தி கொடூரமாகத் தாக்குவது என சிங்களக் கடற்படையின் அட்டூழியம் நீடிக்கிறது. இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம் என சூளுரைத்த பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தும் இன்னமும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்ற வேதனையை இச்செயற்குழுக் கூட்டம் வெளிப்படுத்துகிறது. கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையில் கொடுமைகளை அனுபவித்த 40 தமிழக மீனவர்கள் தற்போதுதான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர் விடுதலைக்காக மத்திய அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தால், ரஷ்யாவுக்கு சென்ற நிலையிலும் கூட பாகிஸ்தானின்பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் பிரதமர் மோடி அவர்கள், தமிழக மீனவர்கள் விவகாரத்திலும் அதே நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழக மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

9. இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறையில் இருந்து உயிர்தப்பி தாய் தமிழகத்தில் அடைக்கலம் கோரி வந்த ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக சிறப்பு முகாம்கள் எனும் சிறைக் கொட்டடிகள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சிறப்பு முகாம்களில் இருந்து தங்களை விடுதலை செய்யக் கோரி செங்கல்பட்டு, பூவிருந்தவில்லை உள்ளிட்ட முகாம்களைச் சேர்ந்த ஈழத் தமிழ் உறவுகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி முகாமில் ஈழத் தமிழர் கணவனும் மனைவியுமாக தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். ஈழத் தமிழர் நலனில் பெரிதும் அக்கறை காட்டுகிற தமிழக அரசு, ஒட்டுமொத்த இந்த வதை முகாம்களாகிய சிறப்பு முகாம்களை இழுத்து மூடி அவர்கள் இதர ஈழத் தமிழர்களைப் போல முகாம்களில் வாழவோ அல்லது விரும்பும் வெளிநாடுகளுக்கு செல்லவோ தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

10. ஆந்திராவில் கூலித் தொழிலாளர்களாக சென்ற 20 அப்பாவி பழங்குடி இன தமிழர்களை செம்மரம் வெட்டியவர்கள் எனக் கூறி கடத்தி சித்ரவதை செய்து சுட்டுப் படுகொலை செய்த இனப்படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் 20 அப்பாவி தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்வைத்த வேண்டுகோளை ஏற்று தாயுள்ளத்துடன் பரிசீலித்து 20 தமிழர் குடும்பத்துக்கும் அரசுப் பணி வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP