Blogger இயக்குவது.

இலங்கை மீது பொருளாதாரத் தடையை உடனே அமல்படுத்த பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 20 பிப்ரவரி, 2013

இலங்கை மீது பொருளாதாரத் தடையை உடனே அமல்படுத்த பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது இளைய மகனான 12 வயது பாலகன் பாலச்சந்திரனை மிகக் கோரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை மிகவும் வன்மையான குரலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆறுதல் தரக் கூடியது. மேலும் "தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும். இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். 12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்." என்றும் மாண்புமிகு தமிழக முதலவர் வலியுறுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
 
    பாலகன் பாலச்சந்திரன் படுகொலை கண்டு ஒட்டுமொத்த தமிழினமே கொந்தளித்துக் கிடக்கிறது.. தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு, இலங்கை மீது உடனே பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். இந்திய மண்ணில் இனப்படுகொலை நாடான சிங்களவர்களின் எந்த ஒரு நிறுவனமுமே இயங்க அனுமதிக்ககக் கூடாது. இந்தியாவில் செயல்படும் இலங்கை தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவற்றறை உடனே மத்திய அரசு இழுத்து மூட வேண்டும். சிங்களவரின் மதம் சார்ந்த அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இலங்கைக்கு சொந்தமான விமான சேவைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது. போர்க்கால அடிப்படையில் இந்நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பு. இதையும் மீறி இந்திய மண்ணில், தமிழகத்தில் இலங்கை நிறுவனங்கள் இயங்குமேயானால் இலங்கை தூதரகம் உள்ளிட்ட அவை அனைத்தையும் நிரந்தரமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கொள்ளும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன்.

இதேபோல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட கடந்த 22 ஆண்டுகாலமாக இடைவிடாது போராடி தமிழக மக்களுக்கு இடைக்கால மகிழ்ச்சியைப் பெற்றுத் தந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகிறது. அரசிதழில் தற்போது வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகா செயல்படுத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தின் இனம், மொழி நலன்களுக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகள் அனைத்துக்கும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP