Blogger இயக்குவது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆணவப் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று 17.03.2015 வெளியிட்டுள அறிக்கை: 

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம்- ரணிலின் ஆணவப் பேச்சுக்கு மத்திய அரசே முடிவு கட்டு!!
தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது வழக்கு தொடருக!!
தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் கொக்கரித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அண்மைக்காலமாக தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இத்தகைய கொலைவெறிக் கருத்தை வெளிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கருத்து தெரிவித்த போது, இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் விளக்கம் கேட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் இதே கருத்தை சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்தார். 

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் அதே கொலைவெறித்தனத்தோடு இந்திய ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். இப்போதும் மத்திய அரசு மவுனமாக இருக்கப் போகிறதா? இப்போதும் இந்திய நாட்டின் குடிமக்களாகிய தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற ரணிலின் அறிவிப்புக்கு சப்பைக் கட்டு காரணத்தை மத்திய அரசு சொல்லப் போகிறதா? ரணிலின் இந்த கருத்தைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்; அத்துடன் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது மத்திய அரசு வழக்குத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். 

இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை; இலங்கையின் இத்தகைய இனவெறிப் போக்குக்கு சரியான பாடம் கற்பிக்க தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட "இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP