Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 15 நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் - பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பேட்டி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:

கேள்வி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த 2 ஆண்டுகாலத்தில் உங்கள் கட்சியின் வளர்ச்சியை எப்படிபார்க்கிறீர்கள்?

வேல்முருகன்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் எங்களுடைய கட்சி இந்த இரண்டு ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை கவர்ந்துள்ளது. நாங்கள் தமிழர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறோம். போராட்டங்களை முன்னெடுக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காகவும் போராடுகிறோம். தமிழர்களை நேசிக்கிற அனைவரும் எங்களுடைய கட்சியில் இணைந்து வருகின்றனர்.

கேள்வி: தமிழர் நலன் சார்ந்தபிரச்சனைகளுக்கு நீங்கள் போராடினாலும் இன்னமும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதிக்கம் செலுத்திய இடங்களை விட்டு உங்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியே வரவில்லைதானே?

வேல்முருகன்: பாட்டாளி மக்கள் கட்சி
வடமாவட்டங்களில் மட்டுமே இருக்கக் கூடிய கட்சி. அது சாதிய வட்டத்திற்குள் அடங்கிய கட்சி. ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வடமாவட்டங்கள் மட்டுமல்லாது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, போன்ற தென் மாவட்டங்களிலும் வளர்ந்து வருகிறது. தமிழர் நலனுக்காக, தமிழ் ஈழ விடுதலைக்காக போராடும் எங்கள் கட்சியில் பரவலாக இளைஞர்கள் இணைந்து வருவதால் தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடைய கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறீர்கள்?

வேல்முருகன்: இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி சேரப்போவதில்லை. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ள கூட்டணியில் நாங்கள் இணையப் போவதில்லை.

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் அல்லது பேச்சுவார்த்தை நடத்தும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று சொல்லி வருகிறீர்கள். அப்படியானால் அ.தி.மு.க.வைத்தான் ஆதரிக்கப் போகிறீர்களா?

வேல்முருகன்:
.தி.மு.க ஆதரவு நிலைப்பாடு என்று கூற முடியாது. தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமாக இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்றும் போராட்டம் நடத்தினோம். முதல்வர் ஜெயலலிதா அதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். கெய்ல் எதிர்ப்பு, மீனவர்கள் வாழ்வுரிமை போன்ற எங்களின் போராட்டங்களின் மூலமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கை தமிழர்களின் நலன்காக்கும் வகையில் அமைந்துள்ளது. இவற்றுக்காக அரசை ஆதரித்துப் பேசினால் உடனே அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாடு என்று கூறிவிட முடியுமா?

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் உங்கள் கட்சி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என கருதுகிறீர்கள்?

வேல்முருகன்:
தமிழர்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். என்.எல்.சி முற்றுகைப் போராட்டம், ராஜபக்சே இந்தியா வந்தபோது பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டங்களில் பங்கெடுத்த இளைஞர்கள் வாக்குகளாக மாறும் பட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிச்சயம் 15 நாடாளுமன்றத் தொகுதிகள் வரை வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்

கேள்வி: மின்வெட்டு, இடஒதுக்கீடு, சிதம்பரம் நடராஜர் கோயில், கூடங்குளம் அணு உலை விவகாரங்களில் நீங்களும் களத்துக்கு வந்து இறங்கி போராடிவிட்டு இப்போது அ.தி.மு.க ஆதரவு நிலையை எடுப்பது சரியாகுமா?

வேல்முருகன்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இதுவரை எந்த ஆதரவு நிலையையும் எடுக்கவில்லை.

கேள்வி: அ.தி.மு.க.கூட்டணிக்காக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நீங்கள் அல்லது உங்களது கட்சி நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான செய்திகள் பற்றி?

வேல்முருகன் : அது தவறான தகவல். நான் இதுவரை அ.தி.மு.க.வின் நால்வர் குழுவில் உள்ள ஒ.பன்னீர் செல்வத்தை சந்திக்கவில்லை.

கேள்வி: முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உங்கள் மீது எத்தனையோ வழக்குகள் போடப்பட்டு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.. இப்போது அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது நெருடலாக இல்லையா?

வேல்முருகன்: என்மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலில் வழக்குகளை சந்திக்காமல் இருக்க முடியாது. தி.மு.க ஆட்சி காலத்திலும் என்மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளது.

கேள்வி: உங்களது பிரிவால் பாட்டாளி மக்கள் கட்சி பாதிக்கப்பட்டுள்ளதாகா கருதுகிறீர்களா?

வேல்முருகன்: நிச்சயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது தெரியவரும்.

கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் உங்களது அணுகுமுறை எப்படி இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா?

வேல்முருகன்: நாங்கள் லோக்சபா தேர்தலை குறிவைக்கவில்லை. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து போராட வேண்டும் என்பதுதான் இலக்கு. எதிர்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்து போட்டியவேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் போட்டியிடுவேன்.

கேள்வி: தனியாக நிற்போம் என்று கூறிய பாட்டாளி மக்கள் கட்சி இப்போது ரகசியமாக கூட்டணிக்கு முயற்சிக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?

வேல்முருகன்: அதுதான் ராமதாசின் கொள்கையற்ற அரசியல். முதலில் தேசிய கட்சியுடன், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறினார். சமீபத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார். அவரது கொள்கையற்ற அரசியல் இதிலிருந்தே புலப்படும்.

கேள்வி: டாக்டர் ராமதாஸின் பலம், பலவீனம் என்ன?

வேல்முருகன்: இரண்டு கோடி மக்கள் தொகைக் கொண்ட ஒரு இனத்தின் தலைவர் என்று கூறிக்கொள்வதுதான் அவரின் பலம். அவரது வாய்தான் மிகப்பெரிய பலவீனம்.

கேள்வி: அன்புமணி ராமதாஸ் பற்றி உங்கள் கருத்து?

வேல்முருகன்:
மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்த போது தமிழக மக்களுக்காக பல்வேறு சிறப்பாக திட்டங்களை அமல்படுத்தினார் அது பாராட்டப்பட வேண்டியது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏ.கே.மூர்த்தி, மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சராக இருந்த போது பல்வேறு தொடர்வண்டிகள் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரட்டை ரயில்பாதைகள் போடுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

கேள்வி: உங்களது போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் ஒரு களமாக உள்ளது. எதிலும் தெளிவு இருப்பது போலத் தெரியவில்லையே ஏன்...?

வேல்முருகன்: எங்களுடைய போராட்டங்களை ஊடகங்கள் சரியான அளவில் தமிழகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்கவில்லை. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

கேள்வி: தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைவரும் தனிதொலைக்காட்சி, பத்திரிக்கைகள் நடத்துகின்றனர். ஆதரவு தொலைக்காட்சியும் உள்ளது. ஆகையால் உங்களுக்கு தொலைக்காட்சி தொடங்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?

வேல்முருகன்: நான் தொலைக்காட்சி தொடங்கும் நிலையில் இல்லை. எந்த தொலைக்காட்சி நிறுவனத்திடமும் போய் என் தொடர்பான செய்திகளை போடச் சொல்லி கேட்டதும் இல்லை.

கேள்வி:
அர்விந்த் கெஜ்ரிவால் வளர்ச்சிக்கு ஊடகங்களும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

வேல்முருக
ன்: நிச்சயம். அரசு ஊழியராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் இன்றைக்கு டெல்லி முதல்வராக முக்கிய காரணம் ஊடகங்களின் ஒத்துழைப்புதான் என்பதை மறுக்க முடியாது.

கேள்வி: பாமக இல்லாத பாஜக கூட்டணியில் இடம்பெறுவதற்கு நீங்கள் தயாரா?

வேல்முருகன்: இப்போதைக்கு அது தொடர்பான எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்படலாம் என சுப. உதயகுமார் அழைப்பு விடுத்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டீர்கள்.. அந்த கட்சியுடன் இணைவதில் அல்லது இணைந்து செயல்படுவதில் எது தடையாக இருக்கிறது?

வேல்முருகன்:
தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு பிரிவாக இருக்கிறது. என்ன பெயரில் செயல்படப் போகிறது. யார் தலைமையின் கீழ் செயல்படப்போகிறது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உதயகுமார் தலைவராக இருக்கப் போகிறாரா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என்று கூறியுள்ளேன்.

கேள்வி: உங்களுக்கு மிக நெருக்கமான வைகோவின் மதிமுக, சீமானின் நாம் தமிழர் இயக்கம் பற்றி உங்கள் கருத்துகள்..

வேல்முருகன்:
இருவருமே தமிழர்களின் நலன் சார்ந்த போராளிகள், ஈழத்தமிழர்களின் நலனுக்காக போராடுகின்றனர். சீமானுடன் தோழமையான நட்பும் உள்ளது.

கேள்வி:
தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் பெரும்பாலும் நீங்கள் வைகோ, சீமான் ஆகியோருடன் இணைந்தே நிற்கிறீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்கலாமே?

வேல்முருகன்:
தமிழர்களின் உரிமைக்காகப் போராடக்கூடிய பழ.நெடுமாறன், மதிமுக, நாம் தமிழர் கட்சியின் சீமான், கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், தியாகு உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணையச் செய்யவேண்டும். ஓர் அணியில் இணைக்கவேண்டும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விருப்பம். இன்றைய சூழ்நிலையில் அது முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில், திமுக, அதிமுக அல்லாத, காங்கிரஸ் பாஜக அல்லாத சுயமரியாதை உள்ள மூன்றாவது அணியாக அது அமையும். வருங்காலத்தில் அது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP